Tuesday, October 12, 2010

தமிழில் பாட,ஆட தமிழர்கள் இல்லை

தமிழில் பாட,ஆட தமிழர்கள் இல்லை

தமிழர்களிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால் வரும் போகும் எவனையும் நன்கு உபசரிப்பார்கள்,ஆனால் கூட இருக்கும் தன இனத்தானை மறந்திடுவார்கள்.கேட்டால் வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் என்று பெருமை வேறு.ஏமாளி இனம் என்று சொல்லாமல் என்னவென்பது?நிஜ வாழ்க்கையில் பல உதாரணங்கள் இருந்தாலும் நம்மவர்களுக்கு விளங்கும் விதமாக கூற வேண்டுமென்றால் சினிமா நட்ச்சத்திரங்கள்தான் வேண்டும்.ரஜினி முதல் நயன்தாரா வரை தமிழகம் வந்து தமிழர்களுக்கு தண்ணிகாட்டிவரும் வெளிமாநிலத்தவரின் பட்டியல் மிகப்பெரியது.

தமிழ் சினிமா எனும் பெருங்கடலில் நடிகர்கள் பலரும் தமிழ் இல்லை.
நடிகைகள் சுத்தமாக தமிழ் இல்லை.
பாடகர்கள் தமிழ் இல்லை.
இசை அமைப்பாளர்கள் பலரும் தமிழர்கள் இல்லை.
கோடி கோடியாய் பணம் அள்ளும் தயாரிப்பாளர்களும் தமிழ் இல்லை.
இயக்குனர்கள் சிலரும் தமிழ் இல்லை.
தமிழ் படவசனங்களில் தமிழ் இல்லை.
தமிழ்பாடல்களில் தமிழ் இல்லை.

உலகில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களில் மேற்சொன்ன திறமைகளுக்கு யாருமே இல்லை.ஆனால் எம்மை விட எண்ணிக்கை குறைந்த மாநிலத்தவர் பலர் இன்று நம் கண்முன் சுப்பர் ஸ்டார்களாக,அல்டிமேட் ஸ்டார்களாக உலாவிக்கொண்டு இருக்கிறார்கள்.வேறு மாநிலத்தவர் பலரும் தமிழ் படங்களில் பாடகர்களாகவோ,நடிக நடிகர்களாகவோ அறிமுகம் ஆனபின்புதான் அவரவர் சொந்த மாநிலங்களில் வாய்ப்பு பெறுகின்றனர்.

ஏன் இந்த நிலைமை?
குறைந்தது தமிழ் பாடல்களை தமிழ் பாடகர்களை வைத்து பாட வைத்தால்தான் என்ன?   

அண்மையில் நடந்து முடிந்த விஜய் தொலைக்காட்சி நடத்திய சுப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது ஒரு வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்.திறமை என்பது வேறு.ஆனால் இதேபோல் வேறு மாநிலங்களில் சென்று திறமை இருந்தால் கூட நம்மவர்கள் யாரும் வெற்றி பெற முடியாது என்பதை யாவரும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.கரணம் எல்லோரும் நம்மைப்போல் ஏமாளிகள் இல்லை.

ஆனால் தமிழர்கள் இருக்கோ இல்லையோ அந்த படத்தை தலையில் வைத்து கொண்டாட,டிக்கெட் எடுத்து படம் பார்க்க கோடிக்கணக்கில் ஏமாளிகள் நாம் இருக்கிறோம்.

Monday, October 11, 2010

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள்
சமீப காலமாக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவது பற்றி கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.இலங்கையிலிருந்து பலரும் வெளிநாடு சென்று கற்பதனால் இலங்கைக்கு அந்நிய செலாவணி விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது.அரசாங்கத்தரப்பு இதனை காரணம் காட்டி தனியார் முதலீட்டினை கல்வியில் ஈடுபடுத்த அனுமதிகளை வழங்கி வருகிறது.இலவச கல்வி முறைமைக்கு பாதிப்பு வராதவரை இது நல்ல விடயம்தான்.ஆனாலும் அரசினதும் சில அமைச்சர்களினதும் நடவடிக்கைகளை பார்க்கும்போது இத்திட்டமானது பொது மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்படுகிறதா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.



குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுவதும் இதன்காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் கற்றல் கற்ப்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெறுகிறது.இது தனியார் கல்வி தொடர்பிலான மாணவர்களுக்கு சார்பானதாக அமைவதோடு பொதுமக்களை அது தொடர்பில் ஈர்ப்பதாகவும் அமைகிறது.எந்த பெற்றார்தான் தன் பிள்ளை விரைவாக படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என எதிர்பார்க்கமாட்டார்?



மேலும் இலங்கையில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை அரச பக்கம் தாவியுள்ள ஐ.தே.க. உறுப்பினர்களாலேயே ஸ்தாபிக்கப்படுவதானது இலங்கையின் கல்வி அரசின் குறுகிய லாபங்களுக்காக அடகு வைக்கப்படுகிறதா என்ற கேள்வியை ஏற்ப்படுத்துகிறது.இந்தியாவை போன்று இலங்கையிலும் அமைச்சர்களினதும் கட்சிகளினதும் நிதி மூலங்களாக கல்வி மாற்றப்படுகிறது.இந்தியாவில் அதிகரித்த தனியார் கல்விப்பல்கலைக்கழகங்களால் கூடுதலான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டபோதும் கல்லூரிகளின் கல்வித்தரம் சரியாக கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் வரிசையில் இந்தியா பின்தங்கி நிற்பதற்கு இதுவே காரணம். இதே நிலை வெகு விரைவில் இலங்கையிலும் ஏற்படப்போகிறது என்பது கசப்பான உண்மை.

Friday, October 8, 2010

நிஜத்திலும் நடிக்கும் நடிகர்கள்

நிஜத்திலும் நடிக்கும் நடிகர்கள்


தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத,அளவுக்கு அதிகமான ஹீரோயிசம் எனும் புலித்தோலை ஏந்தியுள்ள நடிகர்கள் பகுதிநேரமாக தம் திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்து ஏமாற்றியது போக முழுநேரமாக நிஜவாழ்க்கையில் ஏமாற்றிக்கொண்டுவருகிறார்கள்.அவர்களது சொந்தவாழ்க்கை........அந்த கேவலமான வரலாறு தொடர்பானது அல்ல இந்த பதிவு.மாறாக தம் சுயவிளம்பரத்திற்காக மேற்குறிப்பிட்ட கூட்டத்தினர் பயன்படுத்தும் விடயம் பற்றியது.



இலங்கையில் தமிழர்கள் மீது இனஅழிப்பு யுத்தம் இடம்பெற்றபோது,பல நாடுகளும்,மனித உரிமை அமைப்புகளும் எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நடித்துகொண்டிருந்தபோது,தம் பங்கிற்கு இலங்கைத்தமிழர் விவகாரத்தை கையில் எடுத்து,காலம்காலமாக நடத்திவரும் நாடகத்தின் மற்றுமொரு அத்தியாயத்தை மேடையேற்றியது தென்னிந்திய நடிகர் சங்கம்.இலங்கை தமிழர்களுக்கு நிம்மதி இல்லாத பூமிக்கு படப்பிடிப்புக்காகவோ,வேறு காரணங்களுக்காகவோ யாரும் செல்லக்கூடாது என்றும் அவ்வாறு செல்பவர்களின் படங்களுக்கு தடைவிதிப்பது என்றும் அறிவித்து தாமும் தமிழுணர்வாளர்கள் என்று காட்டிக்கொண்டார்கள்.ஆனால் அவர்களது வேஷம் இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவரை மட்டுமே தாக்குப்பிடித்தது.அதுவும் இதுவரை இடம்பெற்ற இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாக்களில் தென்னிந்திய நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிராத நிலையில் அதற்கு பழிவாங்கும் நோக்கில் இவ்விழாவை புறக்கணித்துவிட்டு இலங்கை தமிழர்களுக்காக என்று வீரவசனம் வேறு பேசிக்கொண்டார்கள்.அதிலும் இவ்விழாவை புறக்கணிக்கும்படி நாம் தமிழர் அமைப்பு போராட்டம் பண்ணத்தொடங்கிய பின்புதான் நம் ஹீரோக்களுக்கு அறிவுக்கண் திறந்தது.அதுவரை யாருடைய முந்தானைக்குள் ஒளிந்திருந்தார்களோ????



இவ்வாறு அரங்கேற்றிய நாடகத்திற்கு என்ன நடந்தது?என்ன நடக்கப்போகிறது என்று உங்களில் யாருக்காவது புரிகிறதா?.புரிந்திருந்தால் நீங்கள் மனிதன்,இல்லாவிட்டால்தான் தமிழன்.காரணம் உலகிலேயே மிகவும் ஏமாளியான இனம் நம்மினம்தான்.அது ஏன் என்பது பற்றி வேறு ஒரு பதிவில் ஆராயலாம்.



எங்கிருந்தோ வந்த அசின் இலங்கை வந்து போனது விடயமல்ல,ஆனால் அவள் இங்கு அடித்த கூத்துக்களும் கடைசியில் இலங்கை தமிழர்களுக்காக செய்ததாக பட்டியலிட்ட சாதனைகளும் நீங்கள் அறியாததல்ல.அவள் இனி தமிழ் படங்களில் நடிக்கமுடியாது என்று வந்த அறிக்கைகள்,அவளது படங்கள் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என்ற வீறாப்புகள்,தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எல்லாம் எங்கே?கடைசியில் விஜயுடன் காவலன் படத்தில் நடிக்கிறார் அசின்.படப்பிடிப்பு நடக்கிறது.எதிர்ப்பு காட்டிய தமிழர்கள் கைது.



நடிகர் விஜய் அசினுடன் காவலன் படத்தில் நடிப்பதால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்புகளுக்காக,அவர்களை ஈடு செய்வதற்காக சீமானின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.அதாவது நம் தலையில் மிளகாய் அரைக்கப்போகிறாராம்.தமிழகத்தில் அடுத்த முதல்வராக வர இதைவிட வேறு தகுதி என்ன வேண்டும்?



எல்லோரும் சும்மா சிவனே என்று இருக்க நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அசினுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.இலங்கை செல்வது அவரவர் தனிப்பட்ட விடயமாம்.இதை முன்பே யோசிச்சிருக்கலாம்.நாங்களா கேட்டோம் உங்களை அறிக்கை விடச்சொல்லி?சரத்குமாருக்கும் ராதிகாவிற்கும் இலங்கையில் உள்ள வியாபார தொடர்புகள் தமிழன் என்ற உணர்வைவிட பெரியது.



சூர்யா நடித்த ரத்தசரித்திரம் விரைவில் திரைக்கு வருகிறது.விவேக் ஓபராய் இலங்கை விழாவில் கலந்து கொண்டதால் அவரது படத்துக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தான் வாங்கி வைத்திருந்த விநியோக உரிமையை தயாநிதி அழகிரிக்கு விற்று லாபம் பார்த்துள்ளார் சூர்யா.இனியும் இப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.காரணம் படத்தை வெளியிடுபவர்கள்.எவனுமே வாய் திறக்கபோவதில்லை.



மேற்கூறியவர்கள் மட்டுமன்றி கருப்பு ஆடுகள் பல உள்ளன.ஆனால் இப்போதைக்கு இவை போதும் என நினைக்கிறேன்.இப்படியாக இவர்கள் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல.ஆனால் இலங்கை தமிழர்களை வைத்து இப்படி பிழைப்பு நடத்துவதை விட்டுவிட்டு ........................வைத்து பிழைப்பு நடத்தலாம்(பெட்டிக்கடை,புடவைக்கடை எது வேண்டுமானாலும் இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம்).



இந்தியாவிலுள்ள எந்த ஒரு தரப்பிடமிருந்தும் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் கிடைக்காது என்பதை சகலரும் உணர்ந்துகொண்டால் சரி.அதை குறிப்பிட்ட வீதமாவது வெளிப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

Friday, October 1, 2010

எந்திரன் எனது பார்வையில்..........

எந்திரன் எனது பார்வையில்..........
ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் பிரமாதம்,எந்திரன் கதை 
பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவில்லை,காரணம் நான் திரை விமர்சகன் அல்ல.மேலும் விமர்சனம் எனும் பெயரில் படத்தின் கதையை எழுதி இனி படம் பார்க்க போகும் எவருடைய ஆர்வத்தையும் குறைக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் என் மனதில் தோன்றும் சில விடயங்களை உங்களுடன் பகிரவே இந்த பதிவு.
 
முதல்நாள், கொட்டும் மழையிலும் மணிக்கணக்கான காத்திருப்புக்கு பிறகும் படம் பார்க்க அமர்ந்தால் நினைக்கவில்லை இப்பிடியொரு விருந்து காத்திருக்கும் என்று.படத்தின் எழுத்தோட்டம் முதல் உன்னிப்பாக கவனித்த எனக்கு மிகவும் கவலையை கொடுத்த விடயம் என்னவென்றால் எந்திரன் படத்தின் காரண கர்த்தாக்களில் மிக முக்கியமான எழுத்தாளர் சுஜாதா இப்படம் பார்க்க இப்போது இல்லை என்பது.காரணம் இப்படம் முழுக்க அவரது கதையின் தழுவல்தான்.ஆனாலும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா முதல் கொண்டு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமரர் சுஜாதாவிற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.இப்படத்தின் எழுத்தோட்டத்திலும் கூட அவருக்கு நன்றியோ,அஞ்சலியோ தெரிவிக்கப்படவில்லை.தனியே தவிக்கவிட்டுப்போன கோபமோ தெரியவில்லை ஷங்கருக்கு. ஆனால் யார் மறந்தாலும் அவரது வசனங்கள் படம் முழுக்க அவரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.அதிலும் சந்தானம்,கருணாசிடம் ''மனுஷங்களுக்கும் எனக்கும் இவ்வளவுதானா வித்தியாசம்'' என ரோபோ ரஜினி கேட்கும் வசனம் போன்றவை எல்லாம் சுஜாதாவிற்கு மட்டுமே உரிய கலை.படத்தின் வசனம் :சுஜாதா,ஷங்கர்,கார்க்கி என்றே போடப்படுகிறது.அப்பிடி என்ன சாதித்துவிட்டார் இந்த கார்க்கி?வாரிசு அரசியல்,வாரிசு நடிகர் மாதிரி வாரிசு கவிஞர்.ரொம்பவே ஓவர்.
 
ரஜினிக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உண்டோ அதேபோல் ஷங்கர் படத்திற்கு என்றும் ஒரு கூட்டம் உண்டு.ஷங்கரின் படத்தில் வரும் பாடல் காட்சிகள்,சண்டைக்காட்சிகளை ரசிக்கவென்றே அலையும் கூட்டம் அது.அப்படிப்பட்டவர்களுக்கு எந்திரன் கொஞ்சம் ஏமாற்றம்தான்.பணம் போதவில்லையோ தெரியவில்லை,ரோபோ ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் தெரியும் ஷங்கரின் உழைப்பு பாடல்,சண்டை காட்சிகளில் இல்லை.ஆனால் ஷங்கர் சாதித்துவிட்டார்.
படத்தின் பல இடங்களில் இது ரஜினி படம் என்பதைவிட ஷங்கர் படம் என்பதை திரையில் பார்க்க  முடிந்தது.ரஜினிக்கு அறிமுகப்பாடல் இல்லை,அறிமுகமாகும்போது வரும் வழக்கமான பில்டப்புகள் இல்லை.ஆனால் படம் முழுக்க ரஜினி சாம்ராஜ்ஜியம்தான்.அடுத்த ரஜினி படம் இயக்கபோகும் இயக்குனர்,தயாரிப்பாளர் ஆகியோருக்கு இப்படம் நிச்சயம் வயிற்றில் புளியை கரைத்திருக்கும். காரணம் இதைவிட அருமையாக ரஜினியை எம் கண்முன் நிறுத்த யாராலும் முடியாது.
 
படத்தில் ஆங்காங்கே சில பல குறைகள் இருந்தாலும் தமிழ் திரையுலகின் இத்தகைய அரிய முயற்சிக்கு தலைவணங்கலாம்.வாழ்த்துக்கள்.ரஜினி படமாக ரொம்ப பிரமாதம்,ஷங்கரின் பழைய படங்களுடன் ஒப்பிட்டு என்று கூறுவதை நிறுத்தி புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டிருக்கும் இயக்குனருக்கு இப்படத்தின் வெற்றியை காணிக்கையாக்குவோம்.